மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்ற வெள்ளகாளி. என்பவரை வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னை புழல் சிறைக்கு போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது காவல் வாகனம் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டலில் நிறுத்தி விட்டு போலீசார் உணவருந்தி கொண்டிருந்தனர்.

திடீரென ஹோட்டலில் புகுந்த மர்மகும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி கைதி காளியை வெட்ட முயன்றனர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டும் விழுந்துள்ளது. காயமடைந்த போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக ஆளும் அரசை எதிர்கட்சிகள் சாடி வரும் நிலையில் போலீசார் மீதே நாட்டுவெடிகுண்டு தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது
எக்ஸ் தள பதிவில், “தமிழக சட்டமன்றத்தில் இன்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும்போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி உள்ளது. என பதிவிட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்தும் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கவும் காவல்துறை உயரதிகாரிகள் தீவிர கண்காணிப்பினை ஏற்படுத்தி ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.
