தமிழகத்தில் அன்றாடம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், நில அபகரிப்பு என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. ஆளும் அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக முறையான நடவடிக்கை எடுக்காததால் தான் இது போன்ற அராஜகங்கள் நடந்து வருகிறது. இளைஞர்களிடையே மது பழக்கம் அதிகரித்தது மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் கஞ்சா தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. கூலிப்படையால் கொலை சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றது. துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி விட்டது. அன்றாடம் பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்து தமிழகம் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. பெண் குழந்தைகள் முதல் மாணவிகள் வரை பாதுகாப்பற்ற நிலை உருவாகி விட்டது. எல்லாவற்றையும் விட கூட்டுப் பாலியல் கற்பழிப்புகள் அதிக அளவுகள் நடக்கின்றன. சமீபத்தில் நடைப்பயிற்சிக்கு சென்ற 80 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப் பட்டுள்ளார்.இதையெல்லாம் தடுக்க வேண்டிய தமிழக அரசு செயலிழந்து விட்டது. காவல்துறையோ ஆளும் அதிகார வர்க்கத்துக்கு சேவகம் செய்வதோடு, கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டத்துக்கும், பேரணிக்கும் பாதுகாப்புக்கு சென்று கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைவுக்கு காரணமான தமிழக அரசை முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.