Sunday, June 1, 2025
No menu items!
HomeUncategorizedநீண்டகாலமாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலை திருச்சியில் திறப்பு.

நீண்டகாலமாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலை திருச்சியில் திறப்பு.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு 2009-ம் ஆண்டு பாலக்கரை ரவுண்டானாவில் சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை திறப்பு விழா தள்ளிப்போனது. சிவாஜி சிலையை திறக்கக் கோரி அவரது ரசிகர்கள், காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாலக்கரை ரவுண்டானாவில் சிலை அமைக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என காரணம் கூறப்பட்டது. இதனிடையே, பாலக்கரை ரவுண்டானாவுக்கு பதிலாக வேறு இடத்தில் சிவாஜி சிலை நிறுவப்பட்டு திறக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதையடுத்து, அங்கிருந்த சிவாஜி சிலை கடந்த வாரம், பீடத்துடன் பெயர்த்து எடுக்கப்பட்டு, திருச்சி வார்னர்ஸ் சாலையில் சோனா-மீனா திரையரங்கம் எதிரே உள்ள மினி பூங்காவில் நிறுவும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், பொது இடங்களில் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை நிறுவக்கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், வார்னர்ஸ் சாலையில் சிவாஜி சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து சிவாஜி சிலையை திமுக சார்பில் தனியார் இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி அரசு மருத்துவமனை அருகில் வயலூர் சாலை பிரியும் இடத்தில், மறைந்த குமாரசாமி என்பவருக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினர், மேற்கு மாநகர திமுக பெயரில் இடத்தை தான செட்டில்மென்ட் எழுதிக்கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை நேற்று நிறுவப்பட்டது. இந்த சிலையை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version