தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதன்படி சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய்ஆனந்த், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சத்யராஜ், மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவிற்கான கொடிேயற்றம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் மே மாதம் 7-ந்தேதி நடக்கிறது. மே 10-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.