தஞ்சாவூர் களத்தில் இருந்து…
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்க, அங்கு அமைதியை நிலைநாட்ட வந்த தேர்தல் பார்வையாளரோ ‘கேஷுவல்’ லுக்கில் வந்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தைப் பிரதிபலிக்கும் பொதுப் பார்வையாளர் (General Observer) பொறுப்பில் இருப்பவர், அரசு விதிமுறைகளைத் தூக்கியெறிந்துவிட்டு, டி-சர்ட் மற்றும் டிரவுசர் அணிந்து சர்க்யூட் ஹவுஸில் அமர்ந்திருந்ததுதான் இப்போது தஞ்சை அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்!
என்ன நடந்தது சர்க்யூட் ஹவுஸில்?
தேர்தல் பொதுப் பார்வையாளர் திரு. திவேஷ் செஹாராவை, கடந்த 22-ம் தேதி மாலை சந்திக்கச் சென்றார் 174 தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் எஸ். கரிகாலசோழன். வேட்பாளர் புகாரை அளிக்கச் சென்றபோது, அந்த அதிகாரி அணிந்திருந்த ‘கோலத்தைக்’ கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். ஒரு உயர் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்திருக்கும் இவருக்கு, அடிப்படை நாகரிகம் கூடவா தெரியவில்லை? ஜனநாயகத்தின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட அந்த அதிகாரியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் கரிகாலசோழன்.
அன்று 100 தோப்புக்கரணம்… இன்று டி-சர்ட்! – திடுக்கிடும் பின்னணி
இந்த அலட்சியம் ஏதோ தற்செயலானது அல்ல; இது அந்த அதிகாரியின் இயல்பிலேயே ஊறிய நச்சுத்தன்மை என்கிறார்கள். 2007-ம் ஆண்டு பீகார் மாநிலம் கயாவில் பயிற்சி அதிகாரியாக இருந்தபோதே, ஒரு 55 வயது மூத்த ஊழியரை, அவர் தாமதமாக வந்தார் என்பதற்காக 100 தோப்புக்கரணங்கள் போடச் சொல்லி, உடல் நலம் கூடப் பார்க்காமல் அசிங்கப்படுத்திய நபர் தான் இந்த திவேஷ் செஹாரா.
அந்த முதியவர் தனது வயதின் காரணமாகத் தண்டனையைச் செய்ய முடியாமல் அவமானத்தில் துடித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவேஷ் சேஹ்ரா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 323, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்கே பதிவு செய்யப்பட்டது. அன்று பணியாளரை அவமானப்படுத்திய அதே அதிகாரத் திமிர் தான், இன்றும் தேர்தல் பார்வையாளராக வந்திருக்கும் இவரது நடத்தையிலும் வெளிப்படுகிறதோ?
கேள்விக் குறி!
19 ஆண்டுகளுக்கு முன்பே பணியாளரை அவமானப்படுத்திய வழக்கில் சிக்கியவர், எப்படித் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டார்? இவருடைய பின்னணியை ஏன் தேர்தல் ஆணையம் சரிபார்க்கவில்லை?
தடயவியல் தணிக்கைக்கு உத்தரவிடுமா ஆணையம்?
அந்த அதிகாரியின் கல்விச் சான்றிதழ்கள், யூ.பி.எஸ்.சி (UPSC) தேர்ச்சி விவரங்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் பணி ஆவணங்களைச் சட்டப்பூர்வமான ‘தடயவியல் தணிக்கை’ (Forensic Audit) செய்ய வேண்டும் என்று கரிகாலசோழன் வலியுறுத்தியுள்ளார். அந்த அதிகாரி உண்மையாகவே தேர்வெழுதித்தான் வந்தாரா அல்லது ஆவணங்களில் மோசடி செய்துள்ளாரா என்ற சந்தேகம் வலுப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்க்யூட் ஹவுஸில் அவர் அந்த உடையில் இருந்ததை நிரூபிக்க, அன்றைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அலட்சியமும்.. அதிரடியும்!
தேர்தல் ஆணையம் நடுநிலையான அதிகாரிகளை நியமிப்பதாகக் கூறிவரும் நிலையில், ஒரு பார்வையாளரே இவ்வளவு அலட்சியமாகச் செயல்படுவது வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என நினைக்கக்கூடாது. இவருடைய தகுதி மற்றும் பின்னணியை விசாரிக்க வேண்டியது அவசியம்” என்று கரிகாலசோழன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு சுயேச்சை வேட்பாளர், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தகுதியையே சவாலுக்கு உட்படுத்திப் புகார் அளித்துள்ளது, தஞ்சை தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம், அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமா? அல்லது இந்த விவகாரத்தை அப்படியே மூடி மறைக்கப் போகிறதா? என்பதைத் தமிழகமே உற்றுநோக்கி வருகிறது.
அரசியல் டைம்ஸ் – ஆசிரியரின் பார்வை
“அதிகாரிகள் எஜமானர்கள் அல்ல, பணியாளர்கள்!”
“சமூக மாற்றத்திற்கான முதல் படி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்பதே! ஒரு அதிகாரி தன் பணியில் இருக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியமும், ஒழுக்கமும் வெறும் சம்பிரதாயம் அல்ல; அது அந்தப் பதவியின் தார்மீகக் கடமை. எப்போதெல்லாம் அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மறந்து, சலுகைகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்களோ, அப்போதெல்லாம் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். சட்டத்திற்கு மேலான அதிகாரி யாரும் இல்லை; சட்டத்திற்கு உட்பட்ட அதிகாரி மட்டுமே உண்டு.
