தமிழகத்தில் வசந்த் & கோ பெருமையை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நிறுவனர் வசந்தகுமார் இருந்தவரை அவரது நிறுவனத்தில் ஒரு குறைபாடும் வந்ததில்லை அவர் வர விடுவதுமில்லை ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் நுகர்வோர்கள் என்ன நடந்தது.?

தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள வசந்த் அன் கோ நிறுவனத்துக்கு எதிராக வழக்கறிஞர் சகிலா தேவி தாக்கல் செய்த மனுவில், ஸ்டெபிலைசர் வழங்க மறுத்ததற்காக ₹11,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தஞ்சாவூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு வசந்த் அன் கோ நிறுவனத்திலிருந்து பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் வாங்கிய வழக்கறிஞர் சகிலா தேவி, அதன் பணத்துடன் ஸ்டெபிலைசருக்கான தொகையும் செலுத்தியிருந்தார். பொருட்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும், ஸ்டெபிலைசர் மட்டும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை கேட்டபோதும், “ஒரு வாரத்திற்குள் அனுப்பிவைக்கப்படும்” என நிறுவனம் கூறியது. ஆனால், தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டது. ஸ்டெபிலைசர் இல்லாததால், நீண்ட நாட்களாக பிரிட்ஜ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேறு வழி நின்று வழக்கு போடும் நிலைக்கு தஞ்சை வசந்த்&கோ நிறுவனம் தள்ளப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தஞ்சாவூர் நுகர்வோர் ஆணையம், வசந்த்&கோ நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டுள்ளது. என்றும், சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக நுகர்வோர் சகிலா தேவிக்கு ₹11,000 இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோரின் உரிமைகளுக்கான முன்னுதாரணம்
இந்த தீர்ப்பு, நுகர்வோர் உரிமைகளுக்கு எதிரான செயல்களை சுட்டிக்காட்டும் முக்கிய வழியாகும். சேவை குறைபாடுகளால் பாதிக்கப்படும் நுகர்வோர், தங்கள் உரிமைகளை நிலைநிறுத்த இது போன்ற தீர்ப்புகள் வருவது வரவேற்கத்தக்கது.
செய்தி – தமிழ்