கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசனநத்தம் பகுதியை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் முனிகிருஷ்ணன் வயது (50) இவர் தனது சொகுசு காரில் அவரது நண்பர்களான சீனிவாச ரெட்டி வயது (47), சந்திரப்பா வயது (50), பசவராஜ் வயது (38), மஞ்சுநாத் வயது(47) இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல் சென்று விட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு ஓசூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தை பசவராஜ் ஓட்டினார் தர்மபுரி மாவட்டம் ஜின்டான்ஹள்ளி பிரிவு அருகே வரும்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பிறகு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது, இந்த கோர விபத்தில் முனிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றவர்கள் பலத்த காயமடைந்தார்கள் காயமடைந்த அனைவரும் போலீசாரால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் பசவராஜ் மற்றும் சீனிவாச ரெட்டி ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர், மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மகேந்திரமங்கலம் போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்ட் மனோகரன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணி ஆகியோர் பார்வையிட்டு விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விபத்து ஓசூர் பகுதி அதிமுகவினர் மற்றும் உறவினர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்