Monday, August 4, 2025
No menu items!
HomeUncategorizedதஞ்சையில் கணவன் மனைவி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியான கொடூர சம்பவம்…

தஞ்சையில் கணவன் மனைவி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியான கொடூர சம்பவம்…

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் வயலுக்குச் சென்ற கணவன், மனைவி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (53). விவசாயி. இவரது மனைவி ராமாயி (47). இவர்களுக்கு சொந்தமான வயல் கள்ளப்பெரம்பூர் – பூதலூர் சாலையில் உட்புறமாக அமைந்துள்ளது.

தஞ்சை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று இரவு சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர், ஆலக்குடி, வல்லம் பூதலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் நன்றாக உள்ளதா என்பதை பார்ப்பதற்காக சுப்பிரமணியன் மற்றும் ராமாயி இருவரும் தங்கள் வயலுக்கு இன்று சென்றுள்ளனர்.

இவர்கள் வயலுக்கு செல்லும் வழியில் உள்ள மற்றொருவரின் வயலில் ஆடு, மாடுகள் மேயாமல் இருப்பதற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பி வேலியின் மேல் அடித்த பலத்த காற்றினால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல் சுப்பிரமணியன் மற்றும் ராமாயி இரும்பு வேலி மீது கை வைத்துள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version