தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வரும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டப்படும் என பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு. முருகானந்தம் பேட்டியளித்தார்
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு. முருகானந்தம். அப்போது டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் தமிழக முதல்வருக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வரும், அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற நாட்களில் பாஜக சார்பில் மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
காவிரி நீரை டெல்டா பகுதி பெரிதும் நம்பியிருக்கிறது. எனவே காவிரியின் குறுக்கே எக்காரணத்தைக் கொண்டும் தமிழக பா.ஜ.க அணை கட்ட விடமாட்டோம் என உறுதியளித்தார்.

ஆனால் மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உறுதியாகக் கூறி வருகிறார்.
இந்நிலையில் தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்துக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வருகிறார்.
அவர் வரும்போது எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டப்படும்.
அதே நேரத்தில் தமிழக விவசாயிகள் சார்பில் பாஜக டெல்டா மாவட்டங்களில் சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு மற்றும் கருப்புக்கொடி போராட்டங்களை நடத்தும் என கூறினார்.
தமிழக அரசின் பட்ஜெட், தேர்தல் அறிக்கையைப் போன்று உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எப்படி ஏமாற்றப்பட்டதோ, அதே போன்றுதான் இந்த பட்ஜெட் அறிக்கையும் இருக்கும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் எஸ்.என்.ஜெ. பெயரில் வரும் மதுபான பார்கோடு ஸ்கேன் ஆவதில்லை. என கருப்பு. முருகானந்தம் குற்றம் சாட்டினார்.