2026 சட்டமன்றத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழக பாஜக தலைமையில் சில முக்கிய மாற்றங்களை செய்ய பாஜக தேசியத் தலைமை திட்டமிட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டு உள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் முதல் வார்டு வரை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகள் நாடு முழுவதும் பெற்று வருகின்றன. தமிழ்நாடு பாஜகவை பொறுத்தவரை மண்டல அளவிலான உள்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்து உள்ளது. இந்த நிலையில் புதிய பாஜக மாநிலத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. புதிய மாநிலத் தலைவர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேசிய தலைமை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நியமனம் செய்துள்ளது. கிஷன் ரெட்டி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக பொறுப்பாளராக இருந்தார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மண்டல தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விரைவில் கிஷன் ரெட்டி தமிழகம் வர உள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி. சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வென்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை தோற்ற நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முதல் அக்கட்சித் மாநிலத் தலைவராக அவர் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அப்பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியே பெரும் வெற்றிகளை பெற்றது. இந்த நிலையில் வரும் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக பாஜக தேசியத் தலைமை கருதுகிறது.
கடந்த காலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்து உள்ள நிலையில், வலுவான கூட்டணியில் போட்டியிடும் போது பாஜக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்பது அக்கட்சியின் திட்டம். கடந்த காலங்களில் அதிமுக உடன் அண்ணாமலைக்கு ஏற்பட்ட பிணக்கே கூட்டணி உடைய காரணமாக இருந்து உள்ளது. ஆனால், அதிமுக உடன் இணக்கமாக பயணிக்கும் ஒருவரை மாநிலத் தலைவராக நியமித்து அடுத்த தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்த பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் அல்லது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை தலைவராக நியமிக்க தேசியத் தலைமை ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதே வேளையில் டெல்லி சென்றுள்ள தமிழிசை சவுந்தராஜன், மாநிலத் தலைவர் பதவிக்கு காய் நகர்த்துவதாக கூறப்படும் நிலையில் அவருக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. “இன்னும் ஒருவாரத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 15 முதல் 20 நாட்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய மாநிலத் தலைவர் அறிவிக்கப்படுவார். மீண்டும் ஒருமுறை பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருக்கவும் கட்சியில் விதிகள் உள்ளதாக பாஜக துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் தெரிவித்துள்ளார்.