தவெக தலைவர் விஜய் மீதான தாக்குதலை கடுமையாக்கியிருக்கிறார் சீமான். ‘டீ விக்குறதுக்கு எதுக்கு கட்சி’ , ‘தளபதி நம்ம தலைவிதி’, ‘அணில் குஞ்சுகள்’ என்று சமீபத்தில் தடாலடியாக தவெகவை இறங்கி அடித்துள்ளார் சீமான். அவரின் தற்போதைய விமர்சனத்தால், தவெக, நாதக இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
விஜய் கட்சி தொடங்கும் வரை ‘தம்பி… தம்பி…’ என்று உருகிக் கொண்டிருந்தார் சீமான். கட்சி தொடங்கும் முன்பு சீமானின் அரசியல் குறித்து அதிகம் அலசினார் விஜய். அரசியலுக்கு வரும் முன்பு விஜய் தரப்பு சீமானோடு நேரடியாக சந்திப்பு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஏனென்றால், இப்போது இருக்கும் கட்சிகளில் அதிகளவில் இளைஞர்கள் உள்ள கட்சி நாதகதான். சீமானின் தம்பிகளில் 90 சதவீதம் பேர் 20 முதல் 40 வயதினர்தான். எனவே, இளைஞர்களை ஈர்க்க சீமான் என்னென்ன செய்கிறார் என்பதனை மிகவும் கவனமாக உற்று நோக்கியது விஜய் தரப்பு. அதன் வெளிப்பாடாகவே கட்சிக் கொடியின் நிறம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஸ்லோகன், தமிழ்த் தேசியம் என நாம் தமிழரின் அடையாளங்களை அப்படியே காப்பி அடித்தது தவெக.
சீமானுக்கும், விஜய் அரசியலின் மீது தொடக்கத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. விஜய் முழுவதுமாக தமிழ்த் தேசிய கொள்கைகளை வெளிப்படுத்தினால், ஒரு கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என நினைத்தார். ஆனால், எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘பெரியாரை கொள்கைத் தலைவர்’ என்றும், ‘திராவிடம் – தமிழ் தேசியம் இரு கண்கள்’ என்றும் சொன்னார் விஜய். இதனால் கடும் கோபமடைந்த சீமான், ‘ ஒன்னு அந்த பக்கம் நில்லு, இல்ல இந்த பக்கம் நில்லு, நடுவுல நின்னு லாரியில அடிபட்டு சாகாதே’ என விஜயை வெளுத்து வாங்கினார்.
விஜய், பெரியாரை கொள்கை தலைவர் என்ற பின்னர்தான், பெரியாரை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கினார் சீமான். இது தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை கிளப்பியது. ‘ இது பெரியார் மண் இல்லை, பெரியாரே ஒரு மண் தான்’ என்று அனல் கிளப்பினார் சீமான். கொள்கை தலைவர் பெரியாரை சீமான் கடுமையாக விமர்சித்தபோது, ஒரு வார்த்தை கூட எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை விஜய் தரப்பு.

விஜய்யின் அரசியல் வருகை ஒரு கட்டத்தில் நாதகவுக்கு சவாலாக மாறுமோ என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால், சீமானுக்கு இப்போது வரை பலம் இளைஞர்கள், புதிய வாக்காளர்கள், மாற்றத்தை விரும்புவோர் வாக்குகள்தான். ஆனால், இந்த வாக்குகளில் இப்போது கணிசமான வாக்குகள் விஜய்க்கு செல்லும் சூழல் உள்ளது. இதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், புதியவர்கள் அரசியலுக்கு வரும்போது, இவற்றில் கணிசமான வாக்குகள் அவர்களுக்கு செல்லும். விஜயகாந்த், கமலுக்கு முதல் தேர்தலில் ஓரளவு வாக்குகள் கிடைத்தது இப்படித்தான். அதுபோல முதல் தேர்தலை சந்திக்கும் விஜய் கணிசமான வாக்குகளை வாங்குவார் என சொல்லப்படுகிறது.
சீமான், தற்போது 8.22 விழுக்காடு வாக்குகளை வைத்திருக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக மாறினாலும், சீமானால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடிவதில்லை. இந்த விமர்சனம் அவர் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இந்த சூழலில் விஜய்யின் வருகையால், நாதகவின் வாக்கு வங்கி ஒருவேளை குறைந்தால் அது இன்னும் விமர்சனத்தை அதிகமாக்கும். இந்த இக்கட்டான சூழலில்தான், விஜய்யை முழுமையாக எதிர்க்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் சீமான். இதுவரை ஆங்காங்கே, பட்டும் படாமலும் தவெகவை தாக்கிய சீமான், இப்போது தனது பாணியில் தடாலடியாக இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த வேகத்தில்தான் அணில் குஞ்சுகள், தலைவிதி என்றெல்லாம் கடுமை காட்டுகிறார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் 4 முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. திமுக, அதிமுக அணிகள் முதல் இரு இடங்களை பிடித்தால், மூன்றாவது இடத்துக்கு தவெக, நாதக இடையே கடும் போட்டி நிகழும். கடந்த தேர்தல் வரை மூன்றாம் இடத்தை நாதகவே தக்கவைத்த நிலையில், அதனை விஜய்க்கு விட்டுக் கொடுக்க கூடாது என நினைக்கிறார் சீமான். அதன் வெளிப்பாடாகவே விஜய்யை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

அதேபோல, கடந்த காலங்களில் விஜய்யை வெகுவாக புகழ்ந்தவர் சீமான். எனவே, நாதக சார்பு பொது வாக்குகள் தவெக பக்கம் போகும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே, விஜய் மீது கடுமையான தாக்குதலை தொடங்கி தனக்கான வாக்கு வங்கியை தக்கவைக்கும் வகையிலேயே இப்போது பேச ஆரம்பித்துள்ளார். இதனால் விஜய் பக்கம் செல்லும் பொதுத்தள வாக்குகள் தனக்கு வரும் என நம்புகிறது நாதக.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னபோது, அவரை தடாலடியாக விமர்சித்தவர் சீமான். அதே பாணியில்தான் தற்போது விஜய்யை தாக்க ஆரம்பித்துள்ளார். அதாவது, விஜய்க்கு கொள்கையே இல்லை, விஜய்யிடம் இருப்பது ரசிகர்கள் மட்டுமே, தவெகவுக்கு பொதுப் பார்வை இல்லை எனும் கோணத்தில் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளார் சீமான்.
விஜய் இப்போதுவரை ஒரு சில அறிக்கைகள் – போராட்டங்கள், பனையூர் சந்திப்புகள் மூலமே கட்சியை நகர்த்தி கொண்டு செல்கிறார். இது மக்களிடையே அதிருப்தியை அதிகரித்திருக்கிறது. மறுபக்கம் சீமான், ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் உரிமை, செஞ்சிக் கோட்டை மீட்பு, திருச்செந்தூர் தமிழ் குடமுழுக்கு போராட்டம் என அடித்தளம் வரை வேலை செய்கிறார். இவற்றில் எது எடுபடுகிறது என்பது தேர்தலின் போதே தெரியும்.
விஜய் இப்போது வரை திமுக, பாஜகவின் பெயரை சொல்லிக்கூட அதிகம் விமர்சிப்பதில்லை. அதுபோல முதல்வர் ஸ்டாலினையோ, பிரதமர் மோடியையோ பெயரைச் சொல்லி விமர்சிப்பதையும் தவிர்த்துவிடுவார். ஆனால், சீமான் எல்லோரையும் தடாலடியாக விமர்சிப்பவர். இதுதான் இளைஞர் வாக்குகள் தனக்கு விழுவதற்கு காரணம் என்றும் நம்புகிறார் சீமான். அதே பாணியில்தான் இப்போது விஜயையும் விளாச ஆரம்பித்துள்ளார்.

விஜய் மீதான தாக்குதலை சீமான் அதிகரித்துள்ள நிலையில், இணையத்தில் நாதக – தவெக இடையே பெரும் யுத்தமே வெடித்து கிளம்பியுள்ளது. சீமானுக்கு விஜய் என்ன பதிலடி கொடுப்பார் என பார்ப்போம்…
செய்தி -செந்தில் நாதன்