புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தங்கரை விடுதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் அக்னி ஆறு உள்ளது. இந்த அக்னி ஆறு அருகே அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கான மயான இடம் உள்ளது. இந்த மயான இடத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் இந்த மயான பகுதியில் மணல் கொள்ளை ண அமோகமாக நடைபெற்று வருவதாகவும் இதனால் மயான இடத்தில் 5 அடி காலத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால் உடல் தகனம் செய்ய இடம் இல்லாமல் அப்பகுதியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அவதியுற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜேசிபி இயந்திரம் கொண்டு டிராக்டர்களில் மயானம் இடத்தில் உள்ள மணலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் காவல்துறையினர் கையூட்டு பெற்றுக் கொண்டு இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடாததே இதற்கு காரணம் என்றும் வருவாய்த் துறையினரும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மயானம் அருகே அக்னி ஆறு உள்ளதால் அங்கு எடுக்கப்படும் மணல் கட்டுமான வேலைக்கு பயனுள்ளதாக இருப்பதால் இந்த மணல் கொள்ளையில் சமூகவிரோதிகள் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் இந்த மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.