தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், போதைப் பொருள் தடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்து ஆக வேண்டும். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை. போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு.
போதை என்னும் சமூக தீமையை அனைவரும் சேர்ந்து தான் தடுக்க வேண்டும். வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் போதைப் பொருள் விற்க மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும். போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும். போதைப் பொருள்தான் சாதி, மத மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. போதைப் பொருள் என்பது தனி மனித பிரச்சினை அல்ல. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது” என்றார்.