அதிக வட்டி தருவதாக நம்ப வைத்து 26 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தனியார் சிமெண்ட் நிறுவன உரிமையாளர்கள் மீது நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.
பிரபல தமிழ் நடிகையான சினேகா, சென்னை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசினர். 26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கினேன். முதலீடு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகை கேட்ட போது அதனை தர மறுத்து தன்னை மிரட்டினர்” என்று கூறியுள்ளார். இந்த பணமோசடி புகார் குறித்து கானாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.