மகாராஷ்டிரா மாநில குடிநீர் விநியோக துறை அமைச்சராக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். சிவசேனா கட்சியை சேர்ந்த இவர், ஜல்காவ் புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இந்த நிலையில் இவர் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து அவர் கூறுகையில், “எனது அரசியல் போட்டியாளர்கள் எனது தொகுதியின் சாலை தரத்தை பார்க்க வேண்டும். 30 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள்கூட எனது தொகுதிக்கு வந்து சாலையை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஹேமமாலினியின் கன்னம் (அவர் தொகுதி சாலைகள்) பிடிக்கவில்லையென்றால் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்” என்றார்.
இதனிடையே, அமைச்சர் குலாப்ராவ் பாட்டீலின் பேச்சுக்கு ஹேமமாலினி பதிலடி கொடுத்துள்ளார். “பலரும் இப்படிப் பேசுகிறார்கள். இதற்கு முன்பு லாலு பிரசாத் யாதவும் இப்படி பேசியிருக்கிறார். இப்படியான பேச்சுக்கள் மலிவான ரசனை கொண்டவை” என கண்டனம் தெரிவித்துள்ளார் ஹேமமாலினி. இதனிடையே, அமைச்சர் குலாப்ராவ், “யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குடா தனது தொகுதிகளில் உள்ள சாலைகள் நடிகை கத்ரீனா கைஃப் கன்னங்களை ஒப்பிட்டுப் பேசினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.