கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டமிட்டு உள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தற்போதைய அதிபர் டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்னையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டாலர் (ரூ.1 லட்சம்) நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார்.
மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டாலரில் (ரூ.21,000) இருந்து 400 (ரூ.29,000) டாலராக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.