`ஒமைக்ரான் அச்சமே தருகிறது; அலட்சியம் வேண்டாம்!’- கவிஞர் வைரமுத்து

0

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், “அலட்சியம் வேண்டாம். அலை ஓயவில்லை. அறிவும் சாயவில்லை” என்று கவிஞர் வைரமுத்து எச்சரித்துள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. அவ்வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது. இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“ஒமைக்ரான்

அச்சமே தருகிறது
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை

எழுந்து நின்று
எதிர்கொள்வோம்

வாராமல் தடுப்போம்
வந்தால் ஒழிப்போம்

அறிவியல் அறிவைக்
கடைக்கோடி கிராமம்வரை
கடத்துவோம்

அலட்சியம் வேண்டாம்

அலை ஓயவில்லை
அறிவும் சாயவில்லை

பார்த்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here